கவுன்சிலர் துப்பாக்கியை 'சுட்ட' இருவருக்கு சிறை

திருச்சி:திருச்சி ஹோட்டலில் தங்கியிருந்த நகராட்சி கவுன்சிலரின் கைத்துப்பாக்கியை திருடிய வட மாநில வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில், கவுன்சிலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி, 20வது வார்டு கவுன்சிலர் சங்கர் பங்கேற்றார்.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அவர், உரிமம் பெற்று வைத்துள்ள கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு, அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி காணாமல் போனது. புகார்படி, கன்டோன்மென்ட் போலீசார், ஹோட்டல் ஊழியர்கள் ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், நாராயணன் சவுத்ரி ஆகிய இருவரும், கவுன்சிலர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து துப்பாக்கியை திருடியதாக ஒப்புக் கொண்டனர். நேற்று, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Advertisement