பட்டாசு மூட்டை வெடித்து சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி

ஓமலுார்:கோவில் திருவிழாவில் வெடிக்க, பட்டாசு மூட்டை கொண்டு செல்லப்பட்ட பைக், சாலையோரம் எரிந்து கொண்டிருந்த குப்பை தீயில் சாய்ந்ததில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு, சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில், 27 ஆண்டுக்குப் பின் திரவுபதி அம்மன் கோவிலின், 18 நாள் திருவிழா நடக்கிறது.

திருவிழாவில் வெடிக்க, கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டைமேட்டை சேர்ந்த செல்வராஜ், 29, பைக்கில், 300 கிலோ நாட்டு பட்டாசு மூட்டையை வைத்துக்கொண்டு, நேற்று இரவு, 8:40 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.

பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாய் பகுதியில் சென்றபோது, சாலையோரம் குப்பை எரிந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், எரிந்து கொண்டிருந்த குப்பையில் சென்று விழுந்தது. இதில், மூட்டையில் தீப்பற்ற பட்டாசுகள் சரமாரியமாக வெடித்துச் சிதறின. இதில், செல்வராஜ் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்திக், 11, கஞ்சநாயக்கன்பட்டி, குருவாலியூரை சேர்ந்த சேட்டு மகன் தமிழ்செல்வன், 12, ஆகியோரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அங்குள்ள சில வீடுகளில் கண்ணாடிகள், சுவர்கள் சேதமாகின. அப்பகுதியே புகை மண்டலமானது. காயமடைந்த லோகேஷ், 23, என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் விசாரிக்கிறார்.

Advertisement