கோடைகாலத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

செங்கல்பட்டு:கோடைக்கால பயிர் சாகுபடி பரப்பை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என, வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்மை துறை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை:

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் கடந்த மார்ச் 15ம் தேதி, சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில், கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக வெப்பம், குறைவான மழை போன்றவற்றால் சாகுபடி பரப்பு குறைந்து, வேளாண் விளை பொருட்களின் சந்தை விலை அதிகரிக்கிறது.

கோடைக்காலத்தில், குறைந்த நீர்த் தேவை உள்ள குறுகிய கால பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை மற்றும் எள் போன்ற முக்கிய பயிர்கள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.

இதனால், உழவர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் விளை பொருட்கள் கிடைக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில், கோடை பயிர் சாகுபடிக்கான இலக்காக, எள் 750 ஏக்கர், நிலக்கடலை 500 ஏக்கர், உளுந்து 525 ஏக்கர் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து வட்டாரங்களிலும் கிராம வாரியாக செயல் திட்டம் தீட்டி, இத்திட்டத்தை சிறப்புற செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்திற்கான விதைகள் மற்றும் இடுபொருட்களான ஜிப்சம், ஜிங்க் சல்பேட், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளன.

தேவையான இடுபொருட்களை மானிய விலையில் பெற்று, கோடை பயிர் சாகுபடி செய்து, மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடி பரப்பை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்.

இவ்வறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement