வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கடந்த 1ம் தேதியுடன் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை புதுப்பித்து, கடந்த மார்ச் 31ம் தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி., நர்சிங் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்று வருவோர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் வரும் ஜூன் 10ம் தேதிக்குள், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில் வழங்கலாம்.

அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவங்கிய புத்தகத்துடன், நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement