பா.ஜ., கையெழுத்து இயக்கம் முடுக்கி விடுவாரா நயினார்

சென்னை:தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கம், கடந்த மார்ச்சில் துவங்கியது.

'மே மாதம் வரை, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்படும்; தமிழகத்தில் மும்மொழி கல்வி வேண்டும் என்பது வலியுறுத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை தெரிவித்தார். இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு, வீடாக சென்று மக்களிடம் நேரடியாக சென்று கையெழுத்து பெற்றனர்.

இதுதவிர, 'புதிய கல்வி' எனும் இணையதளம் வாயிலாக டிஜிட்டல் முறையிலும் கையெழுத்து வாங்கப்பட்டது. மண்டல, மாவட்ட தலைவர்கள், தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, மக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டனர். இதனால், அந்த பணி விறுவிறுப்பாக நடந்தது.

அண்ணாமலைக்கு பதில், தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன், இம்மாதம், 12ம் தேதி தேர்வானார். மே மாதம் முடிவடைய இன்னும், 35 நாட்களே உள்ள நிலையில், 60 சதவீதத்துக்கும் அதிகமானோரிடம் கையெழுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, இந்த பணியை நயினார் நாகேந்திரன் முடுக்கி விடுவாரா என்ற எதிர்பார்ப்பு, கட்சி தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement