சட்டவிரோத பாகிஸ்தானியரை திருப்பி அனுப்ப பரமேஸ்வர் உறுதி

பெங்களூரு : “கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிப்போரை, நாடு கடத்துவது உறுதி. இதுகுறித்து, விசாரணை நடக்கிறது,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து, மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் பற்றி, நான் எதுவும் கூற முடியாது. ஏற்கனவே மத்திய அரசு, பாகிஸ்தான் மீது சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல், பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும்.

இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் பாகிஸ்தானியர்கள், நாடு கடத்தப்படுகின்றனர். தற்போது அவர்களை இந்தியாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விசா ரத்து செய்யப்படுகிறது.

கர்நாடகாவில், சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அவர்களின் விசாவை ரத்து செய்து, திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement