கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!

6

ஒட்டாவா: கனடா பார்லிமென்ட் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளர் என அறியப்படுபவரும், என்.டி.பி., கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார்.


@1brகனடாவில் பார்லியின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி பார்லியை கலைத்தார். தேர்தலை முன்கூட்டியே நடத்த அழைப்பும் விடுத்திருந்தார்.


அதன்படி, நேற்று பார்லி தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. இதில் பெரும்பான்மை இடங்களை ஆளும் லிபரல் கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர்.


இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட என்டிபி எனப்படும் புதிய ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்படுபவருமான ஜக்மீத் சிங் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பர்னாபி சென்ட்ரல் தொகுதியில் ஜக்மீத் சிங் (கடந்த முறை இதே தொகுதியில் வென்றார்) போட்டியிட்டார். இதில் அவர் லிபரல் கட்சி வேட்பாளர் வாட் சாங் என்பவரிடம் தோல்வி அடைந்தார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் ஜக்மீத் சிங் 21 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். எதிர் வேட்பாளரான வாட் சாங் 41 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


ஜக்மீத் சிங், கடந்த முறை ட்ரூடோ அரசுக்கு ஆதரவாக இருந்தவர். பார்லி.யில் ட்ரூடோ கொண்டு வரும் எந்த மசோதாவுக்கும் இவரது கட்சியே பெரும் ஆதரவளித்து வந்தது. பிற்காலத்தில் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டார்.


இந்த தேர்தலில் ஜக்மீத் சிங் தோற்ற நிலையில், அவரது கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தது 12 தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் அவரின் என்.டி.பி., கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் கட்சியின் தேசிய அங்கீகாரமும் பறிபோகும் நிலைமை எழுந்துள்ளது.


போட்டியிட்ட தொகுதியில் தோல்வி, கட்சியின் அங்கீகாரமும் பறிபோகும் நெருக்கடி என்ற நிலையில் தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்மீத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


தேர்தல் முடிவு குறித்து அவர் தமது சமூகவலை தள பதிவில் கூறி உள்ளதாவது;


புதிய ஜனநாயக கட்சியினர் இந்த நாட்டை கட்டி எழுப்பினர். நாங்கள் எங்கும் செல்ல போவதில்லை. தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றமே.


கட்சிக்காக நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பயத்தை விட நம்பிக்கையை நாங்கள் தேர்ந்தெடுப்போம். பிரதமர் கார்னி மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement