'கொடுமைக்கும் எல்லை உண்டு' குமுறுகிறார் வினய் குல்கர்னி

பெங்களூரு : “எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு மனிதனை கொடுமை செய்வதற்கு ஓர் எல்லை உண்டு,” என காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வருத்தம் தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி நகை மோசடியில் ஈடுபட்ட ஐஸ்வர்யா கவுடா, இவருக்கு அறிமுகமான தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீடுகளில் நேற்று முன்தினம் துவங்கி, 24 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர். இச்சோதனைக்கு பின்னால் மறைமுகமாக பலர் உள்ளனர். இதற்கு பின்னால் அரசியல் சதி உள்ளது.

என் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இறுதியில் உண்மையை வெல்லும். இதுபோன்ற சோதனைகளால் என்னால் என் தொகுதிக்கு கூட போக முடியவில்லை. மக்களை சந்திக்கவும் முடியவில்லை.

எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு மனிதனை துன்புறுத்துவதற்கு ஒரு எல்லை உண்டு. கையில் அதிகாரத்தை வைத்துள்ளவர்கள், துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

வீட்டில் இருந்து பணம், ஆவணங்கள் என எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஏனெனில், என்னிடமும் எதுவும் இல்லை.

எனக்கும், ஐஸ்வர்யா கவுடாவுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. அவருடன் பண பரிமாற்றம் ஏதும் செய்யவில்லை. மஞ்சுளா பாட்டீல், ஐஸ்வர்யாவுக்கும் இடையே சமசர பேச்சில் ஈடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement