கலவர வழக்கில் ஜாமினில் வந்தவரை கொன்ற 3 பேர் கைது

கோவிந்தபுரா : கே.ஜி.ஹள்ளி கலவர வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை கொலை செய்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு கோவிந்தபுராவில் வசித்தவர் இர்பான், 32. இவர், கடந்த 22ம் தேதி இரவு தன் மனைவியை ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் வசிக்கும், பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பைக்கில் கோவிந்தபுராவுக்கு வந்து கொண்டு இருந்தார்.

ஆட்டோவில் வந்த 3 பேர் பைக்கை வழிமறித்து, இர்பானை வெட்டிக் கொன்றனர். கோவிந்தபுரா போலீசார் விசாரித்தனர்.

இந்த வழக்கில் மைசூரில் தலைமறைவாக இருந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினர்கள் முகமது ஓவைஸ், அப்துல் அலீம், முகமது ஹனிப் ஆகிய மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.கொலையான இர்பானும், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் உறுப்பினர் தான். 2020ல் பெங்களூரு கே.ஜி.ஹள்ளியில் நடந்த கலவர வழக்கில் இர்பான் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே வழக்கில் கைதான அப்பாஸ் என்பவரும் சிறையில் இருந்தார். அங்கு, இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜாமினில் இர்பான் வெளியே வந்தார். அப்பாஸுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்தபோது, அப்பாஸ் குடும்பத்திற்கு உதவி செய்வதாக இர்பான் கூறி உள்ளார்.

ஜாமினில் வந்ததும் அப்பாஸ் வீட்டிற்கு அடிக்கடி சென்றார். அவருக்கும், அப்பாஸ் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த அப்பாஸ் சிறையில், இருந்தபடியே திட்டம் போட்டுக் கொடுத்து, தன் கூட்டாளிகள் மூலம் இர்பானை கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement