தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி: ஆதவ் பெருமிதம்

கோவையில், த.வெ.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க வந்த த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி:

தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மையான கட்டமைப்பு குறித்து, எதிர் தரப்பில் பலர் சந்தேகம் எழுப்புகின்றனர். கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடு, கூட்டங்கள், கருத்தரங்கு வாயிலாக அதை தொடர்ந்து வெளியே காட்டி, பலரையும் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். த.வெ.க.,வில் மட்டும் தான், கருத்தரங்குகள் நடத்தி, அதில் கட்சி நிர்வாகிகளை வரவழைத்து, தேர்தலை சந்திப்பது உட்பட தொழில் நுட்ப ரீதியிலான பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கிறோம்.

இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்தும், மக்களோடு எப்படி இணைந்திருப்பது என்பது குறித்தும், கருத்தரங்குகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. 'மக்களோடு சேர்; மக்களோடு வாழ்' என்ற அடிப்படையில் மக்களிடம் செல்வதற்கான, அரசியல் பயிற்சி அரங்கம் நடத்தப்படுகிறது.

அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு தான், ஓட்டுச்சாவடி முகவர்கள் அதிகளவில் இருப்பர். அ.தி.மு.க., - தி.மு.க., என்ற இரண்டு பெரிய கட்சிகளுக்கு மத்தியில், மூன்றாவது கட்சியில் முதன்மைக் கட்சியாக இருக்கும் த.வெ.க.,வுக்கும் இரு கட்சிகளுக்கும் இணையாக ஓட்டுச்சாவடி முகவர்கள் உள்ளனர். அதே போல, தமிழகத்தின் மூன்றாவது முதன்மையான கட்சி த.வெ.க., தான் என்பது தேர்தல் வாயிலாக கட்டாயம் நிரூபிக்கப்படும்.

தமிழகம் முழுதும் உள்ள 69,000 ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், 3 லட்சம் நிர்வாகிகளுக்கும், தேர்தலை எதிர்கொள்வது குறித்து முறையாக பயிற்சி அளிக்க உள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement