இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் நாடுகள்; பதற்றத்தில் உளறும் பாகிஸ்தான்

காஷ்மீர் பஹல்காமில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவு தருகின்றன. இது பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், பாக்., ஆதரவு கைக்கூலிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, துாதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு பலத்த அடியை தந்துள்ளது.
பாக்., பல்டி
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், 'நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம்' என உரிமை கொண்டாடிய, 'தி ரெஸிஸ்டன்ட் போர்ஸ்' எனும் லஷ்கர்- இ-தொய்பாவின் கைத்தடி பயங்கரவாதிகள், தற்போது, 'எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை; ஆளை விடுங்கப்பா' என, ஜகா வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
'பயங்கரவாதிகளை நாங்கள் தான் அனுப்பினோம்' என, மார்தட்டிய பாகிஸ்தான், நேற்று 'நடுநிலை விசாரணைக்கு தயார்' என, இறங்கி வந்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம், சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் இந்தியாவுக்கு கிடைத்து வரும் ஆதரவு தான். வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, போர் தந்திரங்களில் வித்தகரான இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, நமது அண்டை நாடு இலங்கை என பல நாடுகளும் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் கூட்டாளியான சீனா, நட்பு நாடு பாகிஸ்தானுக்கு உதவாமல், தற்போதைய நிலையில் அமைதி காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானை பொறுத்தவரை, சர்வதேச அளவில் குடைச்சல் கொடுத்தாலும் இந்தியாவுக்கு நட்பு நாடாகவே உள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியாளர்கள் கூட, பாக்., நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும் காஷ்மீரில் நடந்த தாக்குதலை கண்டித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
மாற்று வழி
பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.,யும், போரை ஆதரிப்பதால், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு வேறு வழியில்லை. சிக்கலான தருணத்தில், ராணுவத்திடம் ஆட்சியை இழந்துவிடாமல் இருக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு, இந்தியா மீது விஷம் கக்குவது தான் மாற்று வழி.
முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் ஆகியோர் கூட போரை ஆதரிக்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு இந்தியாவின் பலம் நன்கு தெரியும். படை பலத்திலும், ஆயுத பலத்திலும் இந்தியாவை நெருங்க முடியாது என்பதை பாகிஸ்தான் நன்கு உணர்ந்துள்ளது.
அதனால், 'நாங்கள் அணு ஆயுத நாடு' என பாக்., பூச்சாண்டி காட்டி வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக, அதிபர் ஜர்தாரியின் மகனும், அமைச்சருமான பிலவல் புட்டோ போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக கொக்கரிக்கின்றனர். ஆனால், போர் என ஒன்று வந்தால், இவர்கள் எல்லாம் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்று தஞ்சம் அடைந்து விடுவார்கள். அது தான் நிதர்சனமான உண்மை.
'வேட்டையாடுவோம்'
பஹல்காமில் 26 பேரை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். இத்தருணத்தில் இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை, நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவோர் அழித்து ஒழிக்கப்பட வேண்டும். நாங்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்.
- துளசி கப்பார்ட்,
இயக்குனர், அமெரிக்க தேசிய புலனாய்வு துறை
நீதி முன் நிறுத்த வேண்டும்
அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெளிவுபடுத்தியுள்ளபடி, அமெரிக்கா இந்தியாவுடன் துணை நிற்கிறது. அனைத்து பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறோம். இறந்தவர்களின் உயிர்களுக்காகவும், காயமடைந்தவர்களின் மீட்புக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த கொடூரமான செயலைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
- டாமி புரூஸ்-, செய்தித் தொடர்பாளர், வெளியுறவுத்துறை, அமெரிக்கா
அசைக்க முடியாத ஆதரவு
காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலால், அமெரிக்கா மிகவும் கவலை அடைந்துள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அமெரிக்கா இந்தியாவுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிற்கிறது. இழந்த அப்பாவி உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் அசைக்க முடியாத ஆதரவு உண்டு.
- எலிஸ் ஸ்டெபானிக், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க துாதர்
இந்தியாவுடன் கைகோர்ப்போம்
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணியர் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இஸ்ரேல் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்கிறது.
- கிதியோன் சார், வெளியுறவு அமைச்சர், இஸ்ரேல்










மேலும்
-
இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகத்தின் வளர்ச்சி; உதயநிதி பெருமிதம்
-
த.வெ.க., ஆட்சியில் ஊழல், குற்றவாளிகளுக்கு இடமில்லை: விஜய் உறுதி
-
கட்டுப்பாட்டை இழந்த வேன் கிணற்றில் விழுந்து விபத்து: ம.பி.,யில் 5 பேர் உயிரிழந்த சோகம்
-
காஷ்மீர் தாக்குதல்; பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 14 பேர் கைது
-
பெண் நிர்வாகியிடம் அத்துமீறல்; மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி., கட்சியில் இருந்து நீக்கம்
-
பாக்.கிற்கு அவர்கள் புரியும் மொழியில் பாடம் எடுங்கள்; திரிணமுல் எம்.பி., அபிஷேக் பானர்ஜி வலியுறுத்தல்