கிராம சபை கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதில் திணறல்

திருப்பூர்: கிராம சபை கூட்டத்துக்கு ஆட்களை திரட்டுவதற்கு ஊராட்சி செயலர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.

கிராம சபை கூட்டங்களில், மக்களின் பங்களிப்புடன், கிராமங்களில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப்பணிகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளின் அறிவுறுத்தலாக உள்ளது.

பொதுவாக, கிராம சபை கூட்டங்களில் கூட்டம் சேர்க்க, 100 நாள் திட்ட தொழிலாளர்களை பங்கேற்க செய்வது வழக்கம்.

தற்போது, 100 நாள் திட்டத்தில் தொழிலாளர்கள் பலர் பணி இழந்ததாலும், தொழிலாளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாலும், மே 1ல் நடைபெற உள்ள கிராம சபைக்கு கூட்டம் திரட்டுவதில், ஊராட்சி செயலர்கள் திணறுகின்றனர்.

கிராம சபை குறித்து முன்னரே அறிவித்தாலும், பொதுமக்கள் சொற்ப அளவில் தான் வருகின்றனர்.

இதற்காகவே, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்கள் கண்டிப்புடன் கூறிவந்தன.

இதன் வாயிலாக கூட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்ததாக கணக்கு காட்டப்பட்டு வந்தது.

சில மாதங்களாக, ஒவ்வொரு ஊராட்சிகளிலும், 10க்கும் குறைவான தொழிலாளர்களே 100 நாள் திட்டப்பணியில் உள்ளதால், கிராம சபை கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்க முடியாத நிலையில் ஊராட்சி செயலர்கள் கையை பிசைந்து நிற்கின்றனர்.

Advertisement