முள்ளிப்பாக்கம் ஏரி நீர்வழி தடத்தில் கழிவுநீர் விடுவதால் சுகாதார சீர்கேடு

மறைமலைநகர்:செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளிப்பாக்கம் கூட்டுச் சாலை அருகில், 11 அடுக்குகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் 504 வீடுகள் உள்ள நிலையில், 90 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல், அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் நேரடியாக தண்ணீரில் விடப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக கழிவுநீர், பெருந்தண்டலம் ஏரியில் இருந்து முள்ளிப்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் விடப்படுகிறது.

இதனால், கால்வாயில் இருந்த மீன்கள் உயிரிழந்தன. மேலும், ஏரிகளின் தண்ணீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement