தெள்ளிமேட்டில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் வேண்டுகோள்

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ளது, தெள்ளிமேடு கிராமம். இங்குள்ள சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.

இதில் செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில் செல்லும் தடம் எண் '82சி' பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி கொளத்துார், தெள்ளிமேடு, வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒரகடம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

ஆனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருபுறமும் நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே, தெள்ளிமேடில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, இந்த தடத்தில் சாலை ஓரம் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்தும், இதுவரை மீண்டும் நிழற்குடை அமைக்கப்படவில்லை.

இதனால் பெண்கள், பள்ளி மாணவ -- மாணவியர் நீண்ட நேரம் நின்றபடி, பேருந்துக்கு காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, இந்த பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement