அங்கன்வாடி கட்டடம் பழுது இடித்து அகற்ற வேண்டுகோள்

சூணாம்பேடு:வில்லிப்பாக்கத்தில், பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை இடித்த அகற்ற வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சூணாம்பேடு அருகே, வில்லிப்பாக்கம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.

இந்த அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் ஆரம்பக் கல்வி படித்து வந்தனர்.

மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 30க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்தனர்.

பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இதனால் முன்னெச்சரிக்கையாக, மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் கட்டடத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு, தற்போது பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தில் செயல்படுகிறது.

இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் பயன்பாடு இல்லாமல் பழுதடைந்த பழைய அங்கன்வாடி கட்டடத்தில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.

மேலும், மழைக்காலத்தில் கட்டடம் இடிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement