கிடப்பில் சுரங்கபாதை திட்டம் மீஞ்சூரில் அதிகாரிகள் ஆய்வு

மீஞ்சூர்:மீஞ்சூர் - திருப்பாலைவனம் மாநில நெடுஞ்சாலையில், மீஞ்சூர் ரயில் நிலையத்தின் அருகில், ரயில்வே கேட் அமைந்து உள்ளது. மேற்கண்ட மாநில நெடுஞ்சாலையின் வழித்தடத்தில், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மீஞ்சூர் வந்து செல்ல மேற்கண்ட ரயில்வே கேட்டை கடக்க வேண்டும்.

தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து பயணிக்கின்றன.

குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

இரு சக்கர வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்டநேரம் காத்திருக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே இரு சக்கர வாகனங்கள் மற்றும், நடந்து செல்பவர்களின் வசதிக்காக சுரங்பாதை அமைப்பதற்கு கட்டுமானங்கள் தயாரிக்கப்பட்டு, அது பயனுக்கு வராமல் இருக்கிறது.

ரயில்வே சுரங்கபாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருப்பது குறித்து, உள்ளூர்வாசிகள் திருவள்ளூர் காங்., எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் தெரிவித்தனர்.

அவர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, சந்தித்து மனு அளித்தார்.

மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம், வியாபாரிகள் சங்கம் என பல்வேறு தரப்பில் ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி., சசிகாந்த் செந்தில், மீஞ்சூரில் சுரங்கபாதை அமைப்பது அவசியம் குறித்து தெரிவித்தார்.

தொடர்ந்து, நேற்று ரயில்வே அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் மீஞ்சூரில் ஆய்வு மேற்கொண்டனர். மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இருசக்கர வாகனங்கள் பயணிப்பதற்கான சுரங்கபாதை எங்கு அமைப்பது, மழைக்காலங்களில் சுரங்கபாதையில் தேங்கும் தண்ணீரை எவ்வாறு வெளியேற்றுவது, சுரங்கபாதைக்கு இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement