கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது

கொச்சி: கொச்சியில் வீட்டில் வைத்து கஞ்சா பயன்படுத்தியது மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல மலையாள சினிமா இயக்குநர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
சமீப காலமாக மலையாள சினிமா உலகம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகிறது. பல பிரபலங்கள் மீது நடிகைகள், துணை நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதானார். விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்னும் இரண்டு மலையாள சினிமா இயக்குநர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராகா கரிக்கின்வெல்லம்', 'உண்டா','தல்லுமாலா' உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இவர், தனது நண்பர்களான 'தமாஷா',' பீமன்டே வாழி' படங்களின் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா மற்றும் ஷாலிப் முகமது என்பவருடன் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று இரவு தங்கி புதியப் படம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த குடியிருப்பை பிரபல ஒளிப்பதிவாளர் சமீர் தாஹீர் என்பவர் வாடகைக்கு எடுத்து உள்ளதாக தெரிகிறது.
இங்கு நள்ளிரவு 2 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில், அந்த வீட்டில் இருந்து 1.63 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்ற போலீசார், விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுவித்தனர். இவர்கள்,கஞ்சா பயன்படுத்தியதை உறுதி செய்த போலீசார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் பிரிவு 20(b)(II) மற்றும் 29 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சானாவும் கேரளா திரைப்பட ஊழியர்கள் சம்மேளனத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
டாம் சாக்கோவைத் தொடர்ந்து கஞ்சா வழக்கில் இரண்டு இயக்குநர்கள் கைதானது, அம்மாநில சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.





மேலும்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
பால் வியாபாரிக்கு வெட்டு: 5 பேரிடம் விசாரணை
-
'உலகின் 4வது பெரிய பொருளாதாரம் நடப்பாண்டில் இந்தியா வசமாகும்' ஜப்பானை பின்னுக்கு தள்ளும் என ஐ.எம்.எப்., கணிப்பு
-
தேசப்பற்றுடன் பேச வேண்டும்: வலியுறுத்துகிறார் நயினார் நாகேந்திரன்
-
மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை, வாகனம் சேதம்
-
வர்த்தக துளிகள்