உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கும் ஆத்துார் சுங்கச்சாவடி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடியில் உயர் கோபுர மின்விளக்கு எரியாததால், அப்பகுதி இருளில் மூழ்கியது.

தென் மாவட்டங்களை, செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கும் மிக முக்கிய சாலையாக, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இதில் நாள்தோறும், 50,000க்கும் அதிகமான வாகனங்கள், இரு மார்க்கத்திலும் கடந்து செல்கின்றன.

இந்த ஆத்துார் சுங்கச்சாவடியில், சென்னை மார்க்கத்தில் ஐந்து வாகனங்கள் கடக்கும் வகையிலும், திண்டிவனம் மார்க்கத்தில் ஐந்து வாகனங்கள் கடக்கும் வகையிலும், மொத்தம் 10 'ட்ரக் லைன்'கள் உள்ளன.

வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

அவ்வாறு பரபரப்பான ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் வாயிலாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள், கடந்த ஓராண்டாக, இரவில் எரிய விடப்படாமல், அணைத்து வைக்கப்பட்டு உள்ளன.

இதனால், சென்னை போன்ற நகரங்களில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்குச் செல்லும் மக்கள், சுங்கச்சாவடியில் வெளிச்சம் இல்லாமல், சாலையைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

சுங்கச்சாவடி நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையைக் கடக்கும் பொதுமக்கள், சில நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, விபத்துகளை தடுக்கும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், இரவு நேரங்களில் உயர் கோபுர மின்விளக்குகளை எரிய விட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement