'கூகுள் பே'யில் அனுப்புவதாக ரூ.6,000 அபேஸ்

பெரும்பாக்கம்:தாம்பரம் சானடோரியம், ஜெயா நகர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 38.

இவர், நேற்று இரவு 10:00 மணிக்கு, தனது வங்கி கணக்கில் 6,000 ரூபாயை செலுத்துவதற்காக, பெரும்பாக்கத்தில் உள்ள அரசு வங்கி ஏ.டி.எம்.,மில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தோம். ஆனால், ஏ.டி.எம்., கார்டை எடுத்து வர மறந்து விட்டோம்.

அதனால், உங்களிடம் உள்ள பணத்தை கொடுத்தால், நாங்கள் அதே தொகையை 'கூகுள் பே' வாயிலாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறோம் என, கூறியுள்ளனர்.

இதை நம்பிய பிரகாஷ், தான் வைத்திருந்த 6,000 ரூபாயை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கியவுடன், அம்மூவரும் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement