203 கட்டுமான திட்டங்களுக்கு நான்கு மாதங்களில் ஒப்புதல்

சென்னை:சென்னை பெருநகர் பகுதியில், கடந்த நான்கு மாதங்களில், ஆன்லைன் முறையில், 203 கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.

நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள், 2021 முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. தற்போது, ஒற்றை சாளர முறைக்கான இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

இதில், கட்டுமான நிறுவனங்களின் விண்ணப்பம், டிஜிட்டல் முறையில் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. அதிகாரிகளின் குறிப்புகளும் டிஜிட்டல் முறையிலேயே பதிவிடப்படுகிறது.

கட்டுமான திட்டங்களுக்கு பல்வேறு துறைகளின் தடையின்மை சான்றிதழ் வழங்கும் பணியும் ஆன்லைன் முறையிலேயே நடக்கிறது.

இதனால், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை காலம், 180 நாட்களில் இருந்து, 60 நாட்களாக குறைந்துள்ளது.

இந்நிலையில், 2024ல், 12 மாதங்களில், 678 கட்டுமான திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் ஒப்புதல் தரப்பட்டது. இதில், ஜன., முதல் ஏப்., வரையிலான நான்கு மாதங்களில், 147 திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால், நடப்பு ஆண்டில், ஏப்., வரையிலான, நான்கு மாதங்களில், 203 கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 12 அதிக உயர அடுக்குமாடி கட்டடங்கள், 49 மனைப்பிரிவுகளும் அடங்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement