மாணவர்கள் தொழில் முனைவோராக நீதிபதி நிர்மல் குமார் வேண்டுகோள்

சென்னை:சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரியின், 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா; டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின், 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பிரின்ஸ் கல்விக் குழுமத்திற்கு பாராட்டுக்கள். பிரின்ஸ் கல்விக் குழும மாணவர்கள், பல தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பெறுவது பெருமைக்குரியது.

பட்டம் பெறுவதன் வாயிலாக, வாழ்வின் முதல் படியை மாணவர்கள் எடுத்து வைத்துள்ளனர். இந்த கல்வி அறிவை வைத்து நடைமுறை சிக்கல்கள், சவால்களுக்கு தீர்வு காண வேண்டும்.

பட்டம் பெறுவதுடன் கல்வி நின்று விடுவதில்லை. கல்வி அறிவை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இறுதிவரை புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைத்திருக்க முடியும்.

வாய்ப்புகள் உலகம் முழுதும் உள்ளது. அவற்றை தேடிச்சென்று கடினமாக உழைத்தால் நிச்சயம் இலக்கை அடையலாம்.

மாறிவரும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்கால தேவைகளை உணர்ந்து, வேலை தேடுபவர்களாக இல்லாமல், புதிய முயற்சிகளை மேற்கொண்டு, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.

அறிவியல் சாதனங்கள், சமூக வலைதளங்களை தங்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்கலை அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் உள்ளிட்ட, 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இளங்கலை, முதுகலை பட்டங்கள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில், பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேஷ், பொறியியல் கல்லுாரிகளின் முதல்வர்களான சுந்தர் செல்வின், இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement