புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக் கல்லுாரியில் பயின்று தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக 9 பேர் உள்ளனர். இவர்களுக்கு பாராட்டு விழா புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். புதுச்சேரி வக்கீல் சங்கத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், கல்லுாரி முன்னாள் மாணவர்களும் ஐகோர்ட் நீதிபதிகளான சுப்ரமணியன், சுவாமிநாதன், தமிழ்ச்செல்வி, பரத்சக்கரவர்த்தி, கலைமதி, கோவிந்தராஜன், திலகவதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

அரசு சட்டக்கல்லுாரிக்கு எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

புதுச்சேரியில் பள்ளிக் கட்டடத்தில் முதன்முறையாக சட்டக்கல்லுாரி துவங்கப்பட்டது. நானும் சட்டக்கல்லுாரி மாணவர் என்பதால், சிறிய அறையில் ஜன்னலோரம் அமர்ந்து சாலையில் போவோரை பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது. சட்டக் கல்லுாரியில் படிக்கும் போதே எனது ஊரைச் சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியிலான உதவிக்கு தேடி வருவர்.

கல்லுாரி முடிந்ததும் அவர்களுக்கான தேவைகளுக்கு சட்டசபை சென்று உதவுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது துவங்கியது என்னுடைய அரசியல் பணி. இப்போதும் தொடர்கிறது. அதனால் நீதிமன்றப் பணிகளில் ஈடுபடவில்லை.

உள்கட்டமைப்பு எப்படி இருந்தாலும் கற்பிக்கும் முறை சிறந்ததாக இருந்தால், சிறந்தவர்களை உருவாக்கமுடியும் என்பதற்கு புதுச்சேரி சட்டக்கல்லுாரி முன்னுதாரணமாக உள்ளது.

இக்கல்லுாரியில் படித்தவரே தற்போது இந்திய அட்டர்ணி ஜெனரலாக உள்ளார். அதன்படியே, புதுச்சேரி சட்டக் கல்லுாரியில் பயின்றவர்கள் தற்போது நீதிபதிகளாகியுள்ளனர். அரசியலில் ஈடுபட்டு நான் முதல்வர் பொறுப்பேற்றதும் காலாப்பட்டில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லுாரி வளாகம் அமைக்கப்பட்டது.

தற்போது சட்டப்பல்கலைக் கழகம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, தேசிய சட்டப் பள்ளி அமைக்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டக்கல்லுாரியில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். விரைவான நீதி மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக பெகல்ஹாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வக்கீல் சங்க பொதுச்செயலர் நாராயணகுமார் நன்றி கூறினார்.

Advertisement