விஜய் மவுசு ஏறுகிறதா: உளவு துறை ஆய்வு

12

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பூத் ஏஜன்டுகள் கருத்தரங்கம் நடத்திய நிலையில், அவரது கட்சி செல்வாக்கு அதிகரிக்கிறதா என உளவுத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


த.வெ.க., என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயார்படுத்தி வருகிறார்.

நான்கு மண்டலம்



கட்சி கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், 120 மாவட்டச்செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுதும் உள்ள, 60,000 ஓட்டுச்சாவடிகளுக்கு, பூத் ஏஜன்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவர்கள் ஓட்டுச்சாவடிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்க கட்சி தலைமை முடிவு செய்தது. ஒரே இடத்தில் வைத்து பயிற்சி அளிக்க முடியாது என்பதால், நான்கு மண்டலமாக பிரித்து, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.


அதன்படி முதல் பயிற்சி கருத்தரங்கம், கோவையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் விஜய் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கி உள்ளார். கோவை சென்ற விஜயை பார்ப்பதற்கு, மக்கள் அதிக அளவில் கூடினர்.


அதேபோல், கூட்டம் நடந்த இடத்திற்கு சென்ற விஜயை, ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். கூட்ட அரங்கிற்குள் நுழைய, தொண்டர்கள் முண்டி அடித்தனர். இதுவரை கட்சி நிகழ்ச்சிகளை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், கட்சி அலுவலகத்திலும் விஜய் நடத்தி வந்தார்.


தற்போது, வெளியிடங்களுக்கு செல்ல, ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். கோவையை தொடர்ந்து மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பூத் ஏஜன்டுகள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.

ரகசிய உத்தரவு



இந்நிலையில், இரண்டு நாட்கள் கோவை கருத்தரங்கம் வாயிலாக, அங்கு விஜய் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என, உளவுத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மேலும், விஜய்க்கு போட்டியாக, துணை முதல்வர் உதயநிதி, அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


விஜயை பார்க்க அக்கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் செல்வதை தவிர்க்க, கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்பட்டது. இதையும் மீறி, விஜயை பார்க்க திரண்டவர்களால், அது ஓட்டாக மாற வாய்ப்புள்ளதா என்பது குறித்து, விரிவாக அறிக்கை அளிக்கும்படி, உளவுத்துறைக்கு ஆளுங்கட்சி சார்பில், ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement