மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்

19

ஜம்மு: காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில், பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறினார்.



தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:


நான் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போது அதை நிறுத்தி விட்டேன்.


சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்? இதுதான் நாம் அவர்களுக்கு வழங்கும் நீதியா?


இப்போது நமது நாடு பாலக்கோட்டில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற ஒரு நடவடிக்கையை எதிர்பார்க்கிறது. அப்போதுதான் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நிகழாது.


இதில் வேதனையான விஷயம் என்னவெனில், தான் மனித குலத்துக்கு எதிராக மாபெரும் குற்றம் இழைத்து விட்டதை இன்னும் பாகிஸ்தான் ஏற்க மறுப்பது தான்.


இப்படி சுட்டுக் கொன்றால் மட்டும், காஷ்மீரில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுடன் இணைந்து விடுவார்களா என்ன? 1947ம் ஆண்டிலேயே நாம் அவர்களுடன் போகவில்லை. இப்போது மட்டும் போய்விடுவோமா என்ன?


இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

Advertisement