செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

12

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.


அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரித்த அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமின் பெற்ற அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றதால், சாட்சியம் அளிக்க எவரும் வரவில்லை என புகார் எழுந்தது. அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையும், மோசடியில் பாதிக்கப்பட்டோரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா? என்பதை 28ம் தேதிக்குள் முடிவு எடுத்து தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். தனக்கு ஜாமின் தான் முக்கியம் என்று கருதிய செந்தில்பாலாஜி நேற்றிரவு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


இந்நிலையில், அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ், அபய் ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ''அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில்பாலாஜி அமைச்சராக கூடாது.


டில்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு ஏற்க கூடாது '' என்று வாதிட்டனர்.



இதற்கு, 'மீண்டும் அமைச்சராக முடியாது என சுப்ரீம்கோர்ட் கூற அதிகாரம் இல்லை' என செந்தில்பாலாஜி தரப்பு வாதிட்டது. பின்னர் நீதிபதிகள், ''மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமினை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்யலாம்'' என தெரிவித்தனர்.இதையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement