'ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தை கூறி என்னை வீழ்த்த முடியாது'

திருபுவனை: துணை முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, என ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்த முடியாது என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.

புதுச்சேரி, சோரப்பட்டு மற்றும் திருபுவனையில் அம்பேத்கர் சிலைகளை வி.சி., தலைவர் திருமாவளவன் திறந்து வைத்து பேசியதாவது:

நாட்டில் ஜாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம், இட ஒதுக்கீட்டை வெளிப்படையாக ஆதரிக்காத ஒரே கட்சி பாஜ., தமிழகத்தில் வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மேல்பாதி கோவில் பிரச்னை உள்ள திட்ட பிரச்னைக்காக தி.மு.க., அரசையும், தமிழக காவல்துறையையும் கண்டித்து வி.சி., கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. ஆனால், எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க., போராட்டங்களை ஏன் நடத்தவில்லை.

தி.மு.க.,வுடன் வி.சி. கட்சி தொடர்ந்து பயணிக்கிறது என்பதையே பலர் கேலி பேசுகின்றனர். நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பா.ஜ., -அ.தி.மு.க., வோடும், தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடும் கூட்டணி பேசும் ராஜாதந்திரம் நமக்கு தெரியாது.

பா.ஜ.,வும், பா.ம.க.,வும் இருக்கும் அணியில் ஒரு போதும் வி.சி., இடம்பெறாது. புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

அப்போது அது ஒரு தவறான யூகத்தை கொடுத்து விடக்கூடாது, நாம் இருக்கின்ற அணியில் தொடர வேண்டும். ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன் மூலம் நாம் இருக்கும் அணி பலவீனப்பட்டால் அது பா.ஜ.,விற்கு சாதகமாக மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தேன்.

எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க., கதவை மூடியது போன்று, விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன். ஆட்சியில் பங்கு, நான்கு பேர் அமைச்சர்களாக வாய்ப்பு, துணை முதல்வர் பதவி என, ஆசை வார்த்தைகளால் என்னை வீழ்த்தி விட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.சி., முதன்மை செயலார் தேவபொழிலன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, லயோலா கல்லுாரி பேராசிரியர் பூவை லெனின், வாழும் மக்கள் இயக்க தலைவர் சாக்கிய தீனா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement