விரைவில் நொய்யல் பாலம் திறப்பு; நடராஜா தியேட்டர் சாலை இருவழிப்பாதையாக வாய்ப்பு

திருப்பூர்: திருப்பூரில் நடராஜா தியேட்டர் ரோடு பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

கடந்த 2023ல் நகர்ப்புற உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு நிதியில் தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தும் வகையில், மொத்தம் 163 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பூர், கோவை, துாத்துக்குடி, காஞ்சிபுரம், திருச்சி, கரூர் ஆகிய மாநகராட்சி, ராமேஸ்வரம் நகராட்சி ஆகிய பகுதிகளில் பாலம் உள்ளிட்ட நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் துவங்கப்பட்டன.இதில், திருப்பூர் மாநக ராட்சியில், நான்கு இடங்களில் புதிய பாலங்கள் கட்டும் பணி துவங்கியது.

நொய்யல் ஆற்றின் குறுக்கில், ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் 18 கோடி ரூபாய் மதிப்பிலும், நடராஜா தியேட்டர் அருகேயுள்ள பாலம் 14 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் வகையிலும் பணிகள் திட்டமிட்டு துவங்கியது.

ஜம்மனை ஓடையில், கே.வி.ஆர்., நகர் பகுதியில், 2.86 கோடி ரூபாய் செலவிலும், சங்கிலிப்பள்ளத்தில், 1.5 கோடி ரூபாய் செலவிலும் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.மொத்தம் 36.36 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் துவங்கின.

இதில், கே.வி.ஆர்., நகரில் பாலம் கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு விட்டது. தற்போது நடராஜா தியேட்டர் பாலம் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. தார் ரோடு மட்டும் அமைக்க வேண்டியுள்ளது.

இப்பணி முடிந்தால், ஒரு வழிப்பாதையாக உள்ள நடராஜா தியேட்டர் ரோடு, இரு வழிப்பாதையாக மாற்றப்படும். இதன் மூலம் நொய்யல் ஆற்றைக் கடந்து செல்வது எளிதாக மாறுவதோடு நகரின் முக்கிய ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement