காரைக்குடிக்கு நீதிமன்றத்தை மாற்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தையும் காரைக்குடிக்கு மாற்றுவதற்கு சிவகங்கை வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிவகங்கையில் வழக்கறிஞர் சங்க கூட்டம் தலைவர் ஜானகி ராமன் தலைமையில் நடந்தது.

செயலாளர் சித்திரைச்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் வல்மீகநாதன், துணை செயலாளர் நிரூபன் சக்கரவர்த்தி, மூத்த வழக்கறிஞர் ராம்பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட தலைநகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் லஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றங்களை காரைக்குடிக்கு மாற்றம் செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், சிவகங்கையில் கூடுதல் சார்பு நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், மாற்றுமுறை ஆவண சட்ட வழக்கு விரைவு நீதிமன்றம், கனிம வள தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

இத்தீர்மானம் குறித்த மனுவை சட்ட அமைச்சர் ரகுபதியிடம் வழங்கியுள்ளனர்.

Advertisement