ஆகாசராயர் கோவிலுக்கு மண் குதிரை ஊர்வலம்

அவிநாசி: பெரிய கருணைபாளையத்தில் இருந்து சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட மண் குதிரையுடன் ஆகாசராயர் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலம் நேற்று நடந்தது.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரியகருணை பாளையம் பகுதி கிராம மக்கள், அங்குள்ள ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண் குதிரையை சப்பரத்தில் கட்டி தோளில் சுமந்தபடி இளைஞர்கள் ஊர்வலம் புறப்பட்டனர்.

பின், மங்கலம் ரோடு, சேலம் - கோவை பைபாஸ் வழியாக, வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயன் கோவில் காலனிபகுதியில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

குதிரையைச் சுமந்து ஊர்வலமாக வரும்போது, ஆங்காங்கே சப்பரத்தை சுமந்து வரும் இளைஞர்களுக்கு தண்ணீர் ஊற்றியும், குடிநீர், மோர் மற்றும் குளிர்பானம் ஆகியவை வழங்கியும் பக்தர்கள்உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆகாசராயருக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஐவர் அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement