பராமரிப்பு இல்லாத சமுதாயக்கூடம்

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டிலுள்ள சமத்துவபுரத்தில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

சமுதாய கூட கட்டடம் வர்ணம் பூசி பல வருடங்களாகியுள்ளது. பாதுகாப்பு இல்லாததால், உள்ளே செல்லும் நபர்கள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

அப்பகுதியினர் கூறுகையில், ''இப்பகுதியில் வசிப்போர், தங்கள் வீட்டு விஷேசத்திற்கு சமுதாய கூடத்தையே நம்பி உள்ளோம். ஆனால், சமுதாய கூடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லை. நிகழ்ச்சி நடத்தும்போது, குடிநீர், மின் விளக்கு உள்ளிட்டவற்றை நாங்களே ஏற்பாடு செய்வதால், பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். எனவே, சமுதாய கூடத்தை பராமரித்து, போதிய அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அதே சமுதாய கூட வளாகத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அது செயல்படாமல் பூட்டு போடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் சுகாதார நிலையத்திற்கு தொலைவில் உள்ள நெருப்பெரிச்சலுக்கு செல்கின்றனர்.

துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement