'லிப்ட்' கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

பெண்ணாடம் பெண்ணாடத்தில் 'லிப்ட்' கொடுத்து கூலித்தொழிலாளியிடம் பணம், மொபைல் பறித்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த சத்தியவாடியை சேர்ந்தவர் பாண்டியன்,57; கூலித்தொழிலாளி.

இவர் திண்டுக்கல் மாவட்டம், அக்கரைப்பட்டியில் உள்ள கரும்பு ஆலையில் அச்சு வெல்லம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சொந்த ஊருக்கு வருவதற்காக, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, நேற்று மாலை 2:30 மணியளவில் பெண்ணாடம் ரயில் நிலையம் வந்தார். பின், அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவர் பாண்டியனிடம் நாங்கள் பெணணாடம் பஸ் நிலையம் செல்கிறோம் எனக்கூறி, 'லிப்ட்' கொடுத்து அவரை ஏற்றிக்கொண்டனர்.

ஆனால் பஸ் நிலையம் செல்லாமல், தெற்குரத வீதி பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி, 200 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இருவரும் பெண்ணாடம் மேற்கு மெயின் ரோடு ரவிச்சந்திரன் மகன் சண்முகப்ரியன், 32, மேலபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், மொபைல், பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement