வெயில் அதிகம்; இயல்பை விட மழை குறைவு; நீரின்றி நிலைப்பயிர்கள் பாதிப்பு

உடுமலை : வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கோடை மழை காலத்தில், முதல் இரண்டு மாதம் ஏமாற்றியதால், இயல்பை விட மழையளவு குறைந்துள்ளது.

உடுமலை பகுதிகளில், தென்னை, கரும்பு, மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் என விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி.,பாசன திட்டங்கள் மற்றும் இறவை, மானாவாரி பாசனத்தை ஆதாரமாக கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். நடப்பாண்டு, கோடை மழை ஏமாற்றி வருவதால், நிலைப்பயிர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, கோடை உழவு பணிகளை துவக்க முடியாமல் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ.,ஆகும். ஏப்., வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு, 75.4 மி.மீ., ஆக உள்ளது. நடப்பாண்டு, ஜன.,முதல் நேற்று வரை, 70.27 மி.மீ.,மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியாக பெய்ய வேண்டிய மழையின் அளவை விட 5.13 மி.மீ., குறைவாக பெய்துள்ளது.

கோடை மழை காலத்தில், மார்ச் 13.4 மி.மீ., ஏப்.,48 மி.மீ.,மழை சராசரி மழையளவாக உள்ளது. நடப்பாண்டு, குளிர் கால மழையும், கோடை மழையும் ஏமாற்றியுள்ளது. மே மாதத்தில், சராசரி மழையளவாக, 73.7 மி.மீ., உள்ள நிலையில், வெயில் காலத்தில் பயிர்களை காப்பாற்ற, கோடை மழையை எதிர்பார்த்துள்ளனர்.

வழக்கத்தை விட, நடப்பாண்டு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்கள் நீர்ப்பற்றாக்குறையால் பாதித்துள்ளதோடு, கிணறு, போர்வெலில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதால், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில், கடந்த, 4 மாதத்தில், 70.27 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. கோடை மழை, முதல் இரண்டு மாதம் ஏமாற்றிய நிலையில், வரும் மாதத்தில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் முதல் செப்.,வரை, தென்மேற்கு பருவமழை சராசரியளவு, 154.8 மி.மீ.,ஆகவும், அக்.,-டிச.,வரையிலான வட கிழக்கு பருவமழை, 314.3 மி.மீ., ஆக உள்ளது. நடப்பாண்டு, இயல்பான மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பருவ மழைகள் திருப்தியாக இருக்கும்,' என்றனர்.

Advertisement