கட்டுமான பொருட்களின் விலை உயர்வு வீடு கட்டுவோர், தொழிலாளர்கள் பாதிப்பு

பேரையூர்: கட்டுமான பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் வீடு கட்டுவோர் பாதித்துள்ளனர். இதனால் பணிகள் முடங்கி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக செங்கல், கிராவல், ஜல்லிக்கற்கள், எம்சாண்ட், சிமென்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களும் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இதனால் கட்டுமான தொழிலாளர் பலர் வேலை இழந்து வருகின்றனர். தேவைகள் அதிகரிப்பு, போக்குவரத்து செலவு, மின்சாரம், தொழிலாளர் கூலி போன்றவை அதிகரித்திருப்பதும் இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

செங்கல் விலை ஒன்று ரூ.7ல் இருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. எம் சாண்ட் ரூ. 3500 ல் இருந்து ரூ.5500 ஆகவும், ஜல்லிக்கற்கள் ஒரு யூனிட் ரூ.800 வரையும், கம்பி கிலோ ரூ.15 வரையும், சிமென்ட் ரூ.50 வரையும் அதிகரித்துள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் கூறியதாவது: தங்கத்தைப் போல் கட்டு மானப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொழில் முடக்கம் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

விலை உயர்வு காரணமாக, சதுரடி வீதம் விலை பேசி ஒப்பந்தம் போட்ட வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உட்பட பல்வேறு கட்டுமான பணிகளையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதித்துள்ளோம் என்றனர். தமிழக அரசு விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement