'ஆண்டுதோறும் 14.50 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது'

சத்ரபதி சம்பாஜி நகர் : ''ஆண்டுதோறும், 14.50 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாக உள்ளது,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் அமைந்துள்ள மாநில புற்றுநோய் மையத்தில், புதிய கதிர்வீச்சு இயந்திர வசதியை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு, 14.50 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. புற்றுநோய் மக்களை அச்சமடைய செய்கிறது. அவர்களை பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் உடைந்து போக செய்து விடுகிறது.

இதையடுத்தே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த, எட்டு ஆண்டுகளில் மட்டும் புற்றுநோய் சிகிச்சைக்காக, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement