மக்கள் குறைதீர் கூட்டத்தில் போதிய தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த உதவும்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடந்து வரும் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பதிவு செய்ய போதிய அலுவலர்கள் இல்லை.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார், அலுவலர்கள் திணறுகின்றனர்.கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் காலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பு மக்கள் மனு அளிக்கின்றனர். மனுக்களை பதிவு செய்ய வரிசையில் நின்று டோக்கன் பெறுகின்றனர். அதன்பின் மனுக்கள் கணினியில் பதிவேற்றப்படுகிறது. பின் தங்கள் மனுக்களை கலெக்டர், அதிகாரிகளிடம் நேரடியாக வழங்குகின்றனர்.

கடந்த சில வாரங்களாக வரிசையில் நிற்கும் பொது மக்களுக்கு டோக்கன் வழங்குவதற்கு போதிய அலுவலர்கள் இல்லை. இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

அதே போல் மனுக்கள் பதிவு செய்யும் இடத்திலும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கு முன், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது இப்பணியில் ஈடுபடவில்லை.

அதற்கு ஏற்ப அலுவலர்களும் நியமிக்கவில்லை. இதனால் மனுக்கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் பொது மக்கள் சிரமம் இன்றி மனுக்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement