செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா; வரும் 2ல் 'காட்டேரி வேடம்' தரித்தல்

நாமக்கல்: செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வரும், 2ல், பிரசித்தி பெற்ற, 'காட்டேரி வேடம்' நடக்கிறது.

நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டு பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த, 9ல் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. நாளை இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைத்தல் மற்றும் மாவிளக்கு பூஜை நடக்கிறது.

வரும், 30ல், காவிரி தீர்த்தம் அழைத்தல், இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே, 1 மாலை, 6:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மே, 2 காலை, 8:00 மணிக்கு, அக்னி சட்டி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வரும் பக்தர்கள் கோவிலை அடைகின்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மதியம், 1:00 மணிக்கு, 'காட்டேரி வேடம்' நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, வண்டி வேடிக்கை, புராண காட்சி ஊர்வலம் நடக்கிறது.

Advertisement