பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்

10

ஸ்ரீநகர்; பஹல்காம் சம்பவத்தை முன் வைத்து, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா திட்டவட்டமாக கூறி உள்ளார்.



பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு மேலும் வேகப்படுத்தி வருகிறது.


இந் நிலையில் ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் உமர் அப்துல்லா பேசினார். அப்போது அவர் கூறியதாவது;



26 பேரின் உயிரிழப்பால் நாடு இன்னும் துக்கத்தில் இருக்கும் இப்படிப்பட்ட தருணத்தில் இப்பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரப் போவது இல்லை. பஹல்காமிற்கு பிறகு மாநில அந்தஸ்து எப்படி நான் கேட்க முடியும்?


கடந்த காலங்களில் மாநில அந்தஸ்து பற்றி பேசியுள்ளோம். எதிர்காலத்திலும் பேசுவோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் பார்த்து இருக்கிறோம். பைசரனில் 21 ஆண்டுகள் கழித்து இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதல் நடந்தது கிடையாது.


ஒரு விருந்தினராக, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமை. ஆனால் என்னால் அதை செய்யமுடியவில்லை. தந்தையை இழந்த குழந்தைகள், திருமணமான சில நாட்களிலே கணவனை இழந்த அந்த மனைவி ஆகியோருக்கு நான் என்ன பதிலை சொல்ல முடியும்? அவர்கள் எங்களின் தவறு என்ன என்று கேட்கிறார்கள்.


நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.


இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement