பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு

4

புதுடில்லி: "வான்வெளியை பயன்பாட்டுக்கு பாகிஸ்தான் தடை விதித்ததை அடுத்து நிலைமையை மதிப்பிட்டும், விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். விரைவில் தீர்வு காண்போம்," என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.

கடந்த ஏப்.22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாககுதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் கடந்த வாரம் இந்திய விமான நிறுவனங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. இந்நிலையில் டில்லியில் நடைபெற்ற ஏ.ஐ., பொறியியல் சேவைகள் லிமிடெட் ஏற்பாடு செய்த " ஏவியேஷன் ஹாரிசன் 2025" மாநாட்டில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கலந்து கொண்டார்.


இதனிடையே வான்வெளி மூடல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

"நாங்கள் நிலைமையை மதிப்பிட்டு வருகிறோம், மேலும் விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்" வான்வெளி மூடலால்,வட இந்திய நகரங்களில் இருந்து பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு, நீண்ட துாரம் பறக்கும் நேரத்தை ஏற்படுத்துகிறது, மேலும் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்கிறது.

வான்வெளி நீண்ட காலத்திற்கு மூடப்படுமானால், அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மதிப்பீடுகளை ஆராயுமாறு விமான நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். முழுமையான புரிதலுக்குப் பிறகுதான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்.


வான்வெளி தடைகளைத் தொடர்ந்து சர்வதேச விமானங்களுக்கான விமானக் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் வழிகாட்டுதல்களை வெளியிட ஏதேனும் தற்காலிக திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து, பேசிய அவர்,அனைத்து அம்சங்களையும் பரிசீலிப்போம்.



இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.

Advertisement