தினமலர் செய்தி எதிரொலி திருப்போரூரில் புது மின்மாற்றி பொருத்தம் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு

திருப்போரூர்,
திருப்போரூர் பேரூராட்சி, 6வது வார்டு அபிராமி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன், வீராணம் சாலை அருகே இருந்த மின்மாற்றி பழுதடைந்து இருந்தது.
இதனால், இப்பகுதிக்கு மின்சாரம் தற்காலிகமாக வழங்க, அருகே உள்ள பகுதி மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதனால், குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, மின் சாதனங்களை இயக்க முடியாமல், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
குறிப்பாக, மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டது. இதனால், மின் சாதன பொருட்களை இயக்க முடியாமல், அடிக்கடி அவை பழுதடைந்தன.
இரவு நேரங்களில் துாங்கும் போது மின் விசிறி, 'ஏசி' உள்ளிட்டவற்றை இயக்க முடியாமல், பகுதிவாசிகள் தவித்து வந்தனர்.
மின்னழுத்த பிரச்னையை சரி செய்யவும், புதிய மின் மாற்றி அமைக்கவும், மின் வாரிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர். இதே நிலை நீடித்தால், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து, நம் நாளிதழிலில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று, புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு, மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டது.
இதனால், இப்பகுதி 6வது வார்டு மக்கள் மகிழ்ச்சியடைந்து, நம் நாளிதழுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.