'இரு அமைச்சர்கள் பதவி நீக்கம் அரசை அகற்றும் துவக்கப்புள்ளி': அண்ணாமலை

சென்னை: 'தி.மு.க., வரலாற்றைப் புரட்டி பார்த்தால், ஊழலும், தரம் தாழ்ந்த செயல்பாடுகளும், ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பி இருக்கின்றன' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நாளில் இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது. வேறு வழியின்றி, தி.மு.க., அரசு, இரு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.
ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டுகள், தன் அமைச்சரவையில் வைத்து, அழகு பார்த்த முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பின், வேறு வழியின்றி, அவரை பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
ஏற்கனவே, பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டு இருக்கையில், தினமும் தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரிகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடியும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், தி.மு.க., எனும் கட்சியின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம் தாழ்ந்த செயல்பாடுகளும் தான், அதன் ஒட்டுமொத்த பக்கங்களையும் நிரப்பி இருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், தி.மு.க., செய்து வரும் அரசியலின், இத்தனை ஆண்டுகால துாண்களாக இருக்கின்றன.
தி.மு.க.,வின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது, தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், தி.மு.க.,வின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது. இதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சி அளிக்கிறது. வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசு, தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான துவக்கப்புள்ளியாகவே, இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.