பெங்களூரில் போலீஸ் 'ரெய்டு' 853 பேர் மீது பாய்ந்தது வழக்கு

பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து போலீசார் நடத்திய சிறப்பு ரெய்டில், மது போதை, அதிவேகமாக வாகனம் ஓட்டிய 853 பேர் மீது வழக்கு பாய்ந்தது.

பெங்களூரில் சமீப காலமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் ஏற்படுத்தும் விபத்துகளால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். சில விபத்துகளில், உயிர் சேதம் ஏற்படுகின்றன.

இதை கருத்தில் கொண்ட பெங்களூரு போக்குவரத்து போலீசார், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

கடந்த 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஏழு நாட்கள் பெங்களூரு நகரில் உள்ள 53 போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 'சிறப்பு ரெய்டு' நடத்தப்பட்டது.

இதுகுறித்த அறிக்கை:

நகரில் உள்ள 53 போக்குவரத்து போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில், கடந்த ஏழு நாட்கள் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் காலநேரம் பார்க்காமல் அனைத்து போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டனர்.

இதில், கார், பைக் உட்பட 43,253 வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக 668 பேர் மீது வழக்குகள்; அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து மட்டும் 1.89 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு ரெய்டு மூலம் பெங்களூரில் மது போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ரெய்டுகள் தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement