கோவை காருண்யா பல்கலையில் விண்வெளி தொழில்நுட்ப மாநாடு

கோவை:
கருண்யா நிகர்நிலை பல்கலையின், ஏரோஸ்பேஸ் பொறியியல் பிரிவு சார்பில், சர்வதேச நிலைத்தன்மை வாய்ந்த வான்வழி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மாநாடு நடந்தது.

உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நிபுணர்களை ஒன்றிணைத்து, நிலைத்தன்மை கொண்ட வான்வழி மற்றும் விண்வெளி அமைப்புகளில் புதிய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளும் மேடையாக, இந்த மாநாடு அமைந்தது.

சிறப்பு விருந்தினர்களாக, இஸ்ரேலின் அரியேல் பல்கலையைச் சேர்ந்த ஆஷர் யஹாலோம், டி.ஆர்.டி.ஓ., இணை இயக்குனர் அஜய் பிரதாப் மற்றும் அபுதாபி நெட்ஜெர் குளோபல் அலையன்ஸ் நிறுவனத்தின், முதன்மை அறிவியல் அதிகாரி டாக்டர் பிலிப் பணிக்கர் பங்கேற்றனர்.

மாநாட்டுக்கு முன்னதாக, 'விமான இயக்கி மேம்பாடு மற்றும் இயக்கும் தொழில்நுட்பங்களில் சவால்கள்' என்ற தலைப்பில், பயிலரங்கு நடந்தது. இரண்டு நாள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த ஆய்வாளர்கள், 145க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கினர்.

அதேபோல் டி.ஆர்.டி.ஒ., சி.எஸ்.ஐ.ஆர்., இஸ்ரோ ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வல்லுனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement