திருநங்கை கொலை வழக்கு கணவர் உட்பட மூவர் கைது

கே.ஆர்.புரம்: கே.ஆர்.புரத்தில் திருநங்கையை கொலை செய்த கணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, கே.ஆர்.புரத்தின் சீகேஹள்ளியில் வசித்து வந்தவர் திருநங்கை தனுஸ்ரீ, 45. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர். கர்நாடகா ரக்ஷனா வேதிகேவில் உறுப்பினராகவும் இருந்தார்.

அறக்கட்டளை அமைத்து, சமூக சேவைகள் செய்து வந்தார். இவர் கொலையானது 20ம் தேதி, தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய கே.ஆர்.புரம் போலீசார், ஜெகதீஷே கொலை செய்திருக்கலாம் என, சந்தேகித்தனர். அவரிடம் விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தனுஸ்ரீக்கு நிகழ்ச்சி ஒன்றில் ஜெகதீஷ் அறிமுகமானார். சமுதாயத்தில் தனக்கு ஒரு கவுரவம் கிடைக்க வேண்டும். தனக்கும் கணவர் இருக்கிறார் என்பதை காட்டிக் கொள்ள அவர் விரும்பியுள்ளார்.

ஜெகதீஷை பலவந்தப்படுத்தி, அவர் திருமணம் செய்து கொண்டார். தனுஸ்ரீ மீது ஜெகதீஷுக்கு விருப்பம் இல்லை. தன்னுடன் இருக்கும்படி தனுஸ்ரீ தொந்தரவு கொடுத்தார். தொல்லை தாங்காமல், அவரை கொலை செய்ய ஜெகதீஷ் திட்டமிட்டார்.

தனுஸ்ரீயை 17ம் தேதி கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியதை ஒப்புக்கொண்டார். ஜெகதீஷ், அவரது கூட்டாளிகள் பிரபாகர், சுஷாந்த் ஆகியோர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement