'ஒயிட் டாப்பிங்' தாமதம் ரூ.10 லட்சம் அபராதம்

பெங்களூரு: 'ஒயிட் டாப்பிங்' பணிகளை துவங்காத மற்றும் தாமதமாக செய்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சாலைகளில், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் நடந்து வருகின்றன. சில ஒப்பந்ததாரர்கள், ஒயிட் டாப்பிங் பணிகளை தாமதமாக மேற்கொள்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், தாமதாக பணிகளை மேற்கொண்ட இரண்டு ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கமிஷனர் துஷார் கிரிநாத் அறிவித்து உள்ளார்.

இது குறித்த அறிக்கை நேற்று வெளியானது.

இதன்படி, தெற்கு மண்டலத்தில் உள்ள வெஸ்ட் ஆப் கார்டு சாலை, ஹொசகெரேஹள்ளி பிரதான சாலைகளில் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கவில்லை. இதனால், ஒப்பந்ததாரரான ஜே.எம்.சி., நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், குட்டஹள்ளி பகுதியில் உள்ள வயாலிகாவல் சாலையில், ஒயிட் டாப்பிங் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. இதனால், ஒப்பந்ததாரரான ஓஷன் கட்டுமான நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement