'பைப் லைனில்' எரிவாயு இணைப்பு; இதுவரை 1.50 லட்சம் வீடுகள் பதிவு

சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை, 1.49 லட்சம் வீடுகள் பதிவு செய்துள்ளன. அதில், 12,500 வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், எல்.பி.ஜி., சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் மூலப்பொருளில், இந்த எரிவாயு தயாரிக்கப்படுகிறது.
பல மாநிலங்களில், வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. இது, பூமிக்கு அடியில் எடுக்கப்படுகிறது; சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. எல்.பி.ஜி., சிலிண்டரை விட, விலை குறைவு.
தமிழகத்தில், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுக வளாகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து திரவ நிலை இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இது, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.
மாநிலம் முழுதும், 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும், 2,625 சி.என்.ஜி., முனையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும், இயற்கை எரிவாயு வினியோகிக்க, ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்நிறுவனங்கள், மாநிலம் முழுதும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்க, பூமிக்கு அடியில், 'பைப் லைன்' பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த பணிகள் முடிவடைந்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில், காஸ் வினியோக நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று வாடிக்கையாளர்களை அணுகி, குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்வற்கு பதிவு செய்து வருகின்றன.
இதுவரை, 1.49 லட்சம் வீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 12,500 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
வரும், 2032க்குள் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும்
-
மதுபான நிறுவனங்களுக்கு சம்மன்
-
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் துணைவேந்தரை கைது செய்யலாம்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
விவசாயிகளிடம் காய்கறி வாங்கி விற்கும் திட்டம்: செயல்பாட்டிற்கு வருவதில் இழுபறி
-
போக்குவரத்து கழகங்களுக்கு 2,134 புதிய பஸ்கள் வாங்க 'டெண்டர்' வௌியீடு
-
மே 3ம் தேதி வரை வெப்பநிலை உயரும்
-
வங்கதேசத்தினர் வீடுகள் குஜராத்தில் இடிப்பு