போக்குவரத்து கழகங்களுக்கு 2,134 புதிய பஸ்கள் வாங்க 'டெண்டர்' வௌியீடு
சென்னை: 'அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2,134 புதிய பஸ்கள் வாங்க, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது. புதிய பஸ்கள் அடுத்த ஆறு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், தினமும் இயக்கப்படும் 18,728 பஸ்களில், 1.76 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள, பழைய பஸ்கள் நீக்கப்பட்டு, புதிய பஸ்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய வழித்தடங்களிலும், கூடுதல் பஸ்கள் இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா பாதிப்பு காலமான, 2020, 2021ம் ஆண்டுகளில், போக்குவரத்து கழகங்களில், எந்த வருமானமும் இல்லாமல், அதிக நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால், புதிய பஸ்கள் வாங்க இயலாத சூழல் இருந்தது.
இதன் காரணமாக வயது முதிர்ந்த பஸ்களின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த சில ஆண்டுகளாக, புதிய பஸ்களை இணைத்து வருகிறோம்.
கடந்த நிதியாண்டில், 1,535.89 கோடி ரூபாய் ஒதுக்கி, 3,000 புதிய பஸ்கள் வாங்க உத்தரவிட்டதில், 1,210 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.
இதையடுத்து, தற்போது, 2,134 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் - 557, விரைவு போக்குவரத்து கழகம் - 110, விழுப்புரம் - 340, சேலம் - 145, கும்பகோணம் - 361, மதுரை - 341, திருநெல்வேலி - 129, கோவை - 151 என, புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய பஸ்கள் தயாரிப்பதற்கான நிறுவனம், விரைவில் தேர்வு செய்யப்படும். ஒப்பந்த ஆணை வழங்கிய ஆறு மாதங்களில், புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
புதிய பஸ்கள் வந்ததும், 10 ஆண்டுகளை கடந்து ஓடும் பழைய பஸ்கள் நீக்கப்படும். பயணியர் நெரிசல் மிக்க வழித்தடங்களில், புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும்
-
'பிரவாஹ்' தளத்தை மட்டுமே பயன்படுத்த வங்கிகளுக்கு உத்தரவு
-
ஏ.டி.எம்.,மில் 100, 200 ரூபாய்: ஆர்.பி.ஐ., உத்தரவு
-
'வொர்க்டே' ரூ.220 கோடி முதலீடு; அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
கோவை கோட்ட ஆர்.எம்.எஸ்.,சுக்கு கோ - ஆப்டெக்ஸ் வினியோக 'ஆர்டர்'
-
கங்கைகொண்டான் தொழில் பூங்கா சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்
-
வர்த்தக துளிகள்