மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் ஆவேசம்

புதுச்சேரி; மின் கட்டணம் உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பினர் மற்றும் தொழிலதிபர்கள் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி மின்துறை சார்பில் 2025----26 நிதியாண்டு முதல் 2029--30 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டிற்கான வருவாய் மற்றும் மின்கட்டண நிர்ணயம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது. ஆணையத்தின் தலைவர் அலோக் டாண்டன், ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினர் ஜோதி பிரசாத் தலைமை தாங்கினர். மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் ராஜேஷ் சானியல், கனியமுதன், செயற்பொறியாளர் ரமேஷ், திலகர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மின்துறை சார்பில், கூட்டத்தின் நோக்கம் குறித்து பவர் பாயிண்ட் மூலம் அதிகாரிகள் விளக்கினர்.

கூட்டத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:

புதுச்சேரியில் மின் கட்டணம் என்ற பெயரில் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மின்கட்டண ரசீதில் 10 கட்டணம் வரை வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில் மின்தடை இல்லாத நாளே இல்லை. லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்துறை தனியார் மயமாக்கப்பட உள்ளீர்களா? என்பதை கூற வேண்டும்.

மாணவர் மற்றும் பெற்றோர் கூட்டமைப்பு பாலசுப்ரமணியன்: அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மின்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ.500 கோடியை உடன் செலுத்த வேண்டும். பெரும் நிறுவனங்களில் இருந்து வர வேண்டிய ரூ.300 கோடியை வசூலிக்க வேண்டும். மின் திருட்டை தடுக்க வேண்டும்.

முதல் 2 ஆண்டிற்கு 4 சதவீதமும், அடுத்த 2 ஆண்டிற்கு 5 சதவீத மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை இணை மின் ஒழுங்குமுறை ஆணையம் மறுக்க வேண்டும். மின் கட்டணங்களை உயர்த்தாமல் பழைய கட்டணத்தையை வசூலிக்க வேண்டும்.

சுமங்கலா ஸ்டீல் ராஜேந்திரன்: புதுச்சேரியில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு குறைவாக இருந்த மின்கட்டணத்தை, பல மடங்கு உயர்த்தி, தொழிற்சாலைகளை வெளியேற்றிவிட்டீர்கள். இருக்கின்ற தொழிற்சாலைகளையும் கழுத்தை நெறிக்கிறீர்கள். பாமர மக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

வெளிநடப்பு: சென்டாக் மாணவர் பெற்றோர் நல சங்க தலைவர் நாராயணசாமி பேசுகையில், மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. பயன்படுத்திய ரூ.400 மின்சாரத்திற்கு, பல்வேறு கட்டணங்கள் சேர்த்து ரூ.1,100 கட்ட வேண்டியுள்ளது.

இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார். அதற்கு அதிகாரிகள், அதற்கான கூட்டம் இதுவல்ல என்றனர்.

உடன் நாராயணசாமி, எங்கள் கருத்தை சொல்லக்கூடாது என்றால், கண் துடைப்பிற்காக கூட்டம் நடத்துகிறீர்களா, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்களா எனக் கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழில் மின் கட்டண ரசீது

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பல ஹிந்தியில் பேசினர். பொதுமக்களுக்கு கொடுத்த குறைக் கேட்பு கடிதமும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருந்தது.இதற்கு, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தை தமிழ் தெரிந்தவர்கள் நடத்த வேண்டும். மின் கட்டண ரசீதும் தமிழில் இல்லை. இதனால், எதற்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது புரியவில்லை. மின்கட்டண பில்லை தமிழில் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement