தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியம் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல்: ''தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வழங்க வேண்டும், '' என, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொது செயலாளர் சுபின் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: புதிதாக பணியில் சேர்ந்த பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களின் தகுதிக்காண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறோம். ஆனால் எம்.ஆர்.பி., தேர்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டிய செவிலியர்கள் 8 ஆண்டுகளாகியும் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். 2021ல் பேராடி பெற்ற ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை.

தேர்தல் வாக்குறுதி அளித்தபடி தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களின் மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் என்றார்.

Advertisement