இரவில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் உலா வந்த சிறுத்தையால் 'திக் திக்'

கூடலுார் : கூடலுார் நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் இரவில் திடீரென சிறுத்தை நுழைந்ததால், போலீசார் பதற்றமாகி பதுங்கினர்.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு, போலீசார் சிலர் பணியில் இருந்தனர். இரவு, 8:25 மணிக்கு திடீரென சிறுத்தை ஒன்று, கதவு வழியாக ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

எச்சரிக்கை



இதைப் பார்த்து பதறிய போலீசார், அங்கிருந்த மற்றொரு அறைக்குள் சென்று தப்பினர்.

வரவேற்பு அறையைக் கடந்து மற்றொரு அறைக்குள் சென்ற சிறுத்தை, சிறிது நேரத்தில் வந்த வழியாகவே வெளியேறியது.

சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்தபின், போலீசார் நிம்மதி அடைந்தனர். சம்பவத்தால், போலீசார் மட்டுமின்றி, அப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

தகவலறிந்த நடுவட்டம் வனச்சரகர் தட்சிணாமூர்த்தி மற்றும் வன ஊழியர்கள் நேற்று, போலீஸ் ஸ்டேஷன் சென்று சிறுத்தை வந்து சென்ற 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மக்களை சந்தித்து, இரவில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினர்.

கண்காணிப்பு



வனச்சரகர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ''இங்கு சிறுத்தை வந்துள்ளதால், பொதுமக்களை சந்தித்து நாய்கள் வளர்ப்பதை தவிர்க்கவும், சிறுத்தை நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்.

''வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்,'' என்றார்.

Advertisement