ஸ்பெயின், போர்ச்சுக்கலில் மின் வினியோகம் சீரானது

மாட்ரிட் : ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கலில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மின் தடை ஏற்பட்டது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரம் முழுதும் இருளில் மூழ்கியது.

பெரும்பாலான நகரங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால், விமானம் மற்றும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை, ஏ.டி.எம்., சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல், போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பன் உள்ளிட்ட நகரங்களிலும் மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில், பெரும்பாலான பகுதிகளில் நேற்று மீண்டும் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டது.

இதனால் மாட்ரிட் நகரத்தில் பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டன. வணிக வளாகங்கள், கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

இதே போல், போர்ச்சுக்கலிலும், 99 சதவீதம் மின் தடை மீட்டெடுக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. சைபர் தாக்குதலால் மின் தடை ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் பிரதமர்கள் கூறினர்.

ஸ்பெயினின் மின் விநியோக நிறுவனமான ரெட் எலக்ட்ரிகா, ஐந்து வினாடிகளில் 15 கிகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டதே மின் கட்டமைப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

இதற்கு தொழில்நுட்ப அல்லது தீவிர வெப்பநிலையால் கம்பிகளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருக்கலாம் என கணித்துள்ளது. தெளிவான காரணம் குறித்து அறிய தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement